புதன், 4 நவம்பர், 2009

சவூதியில் தமிழர்கள் பாலத்துக்குக் கீழே தங்கியிருக்கும் அவலம

சென்னை: தங்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்பக் கோரி 2000க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள், ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.

இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழ்நாடு , கேரளா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஜெட்டாவில் உள்ள ஷாராபியாவில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே கடந்த 3 மாதங்களாக வசித்து வருகின்றனர்.

மீண்டும் நாடு திரும்ப பெரும் கவலையுடன் காத்துள்ளனர். இவர்களில் பலர் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியதால் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளனர். சிலருக்கு முறையான பாஸ்போர்ட் இருந்தும், ஸ்பான்சர்களின் அனுமதி இல்லாமல் உள்ளது.

கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்தியர்களை நேற்று சவூதி போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி, மதினத் அல் ஹுஜ்ஜாஜ் என்ற நாடு கடத்தும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த ஆஸ்ட் மாதம், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள், இதே ஷாராபியா மேம்பாலத்திற்குக் கீழ் மோசமான நிலையில் வசித்து வந்தனர். இவர்களை சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ரவிக்குமார் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவர்கள் சவூதியிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பி.எஸ்.முபாரக் கூறுகையில், கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்காக ஜெட்டாவில் தவித்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக வந்தவர்கள் நாடு திரும்புவதற்குத் தேவைப்படும் அவசர சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை இவர்களுக்கு வழங்கியுள்ளோம். ஆனால் ஸ்பான்சர்களின் அனுமதி கிடைக்க தாமதம் ஆவதால் இவர்கள் நாடு திரும்புவதும் கால தாமதமாகிறது. விரைவில் அனைவரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.

ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரக துணைத் தூதர் ராஜீவ் சஹாரே கூறுகையில், கடந்த எட்டு மாதங்களில் 3977 அவசர சான்றிதழ்களை இந்தியத் தூதரகம், இந்தியத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது என்றார்.

ஜெட்டாவில் தவித்துக் கொண்டிருக்கும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா என்ற தொழிலாளர் கூறுகையில், கடந்த 3 மாதங்களாக எங்களைத் திருப்பி அனுப்புமாறு கோரி ஜெட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் முறையிட்டு வருகிறோம்.

நான் தூதரக அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டுக் கதறி எப்படியாவது என்னை அனுப்பி வைத்து விடுங்கள் என்று கோரினேன். ஆனால் என்னைக் காத்திருக்குமாறு கூறி விட்டனர்.

எனக்கு சரியான சம்பளம் தரவில்லை, என்னை மோசமாக நடத்தினார்கள். இதனால் எனது முதலாளியிடமிருந்து நான் ஓடி வந்து விட்டேன்.

ஊரில் எனது குடும்பத்தினர் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். இதனால் உடனே நாடு திரும்ப விரும்புகிறேன். ஆனால் இங்கு அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே உடனடியாக நாடு திரும்ப வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் என்னைப் போன்றவர்கள் இந்த பாலத்திற்குக் கீழே பிச்சைக்காரர்களைப் போல விழுந்து கிடக்கிறோம் என்று கூறி அழுதார்.


தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த அப்பாவித் தமிழர்களை சவூதியிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மொபைல் உள்ளூர் அழைப்பு கட்டணம் 10 பைசா


மொபைல் தொலைபேசி மூலம் உள்ளூர் அழைப்பு கட்டணம் 10 பைசா அளவுக்கு குறையும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் இதை அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்குள் "டெர்மினேஷன்' கட்டணத்தை ஆபரேட்டர்கள் குறைக்க வேண்டும்.

அதன் மூலம் உள்ளூர் அழைப்புக் கட்டணம் நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்டிடி கட்டணம் நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் குறையும் என்றார் அவர்

செவ்வாய், 3 நவம்பர், 2009

'வந்தே மாதரம்' பாடலுக்கு எதிராக ஃபட்வா

'வந்தே மாதரம்' எனத் தொடங்கும் இந்தியாவின் தேசியப் பாடலுக்கு எதிராக ஜமாத் - இ- உலேமா ஹிந்த் என்கிற முஸ்லிம் அமைப்பு ஃபட்வா எனப்படும் மதக்கட்டளையைப் பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் தேவ்பான்ட் நகரில் நடந்து வரும் இந்த அமைப்பின் தேசிய மாநாநாட்டில் இந்தப் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாடலின் சில வரிகள் இஸ்லாம் மதத்துக்கு எதிராக இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

வந்தே மாதரம் பாடல் பாடப்படும் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என முஸ்லிம் பெற்றோர்களை அந்த அமைப்பு கேட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இன்று உரையாற்றுகிறார். சச்சார் கமிட்டியின் அறிக்கை மற்றும் பொடா சட்டம் தொடர்பான பிரச்னைகள் குறித்து முஸ்லிம் தலைவர்களுடன் அவர் விவாதிப்பார் எனத் தெரிகிறது. ஹிந்தி பட இயக்குனர் மகேஷ் பட்டும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.

ஏற்கெனவே கடந்த 2006,ம் ஆண்டில் ஹைதராபாதைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் இதே பாடலுக்கு ஃபட்வா பிறப்பித்திருக்கின்றனர்.

திங்கள், 2 நவம்பர், 2009

துபாயில் கேன்சர் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி


கேன்சர் பற்றிய விழிப்புணர்ச்சி நடைப்பயண நிகழ்ச்சி "பிங்க் வால்க் அதோன் 2009" என்ற பெயரில் துபாயில் உள்ள பர்ஜுமான் ஷாப்பிங் மால் ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.00மணிக்கு பர்ஜீமான் ஷாப்பிங் மாலில் தொடங்கிய பயணம் 3.6 கிலோ மீட்டர் சுற்றி மீண்டும் பர்ஜீமான் மாலில் வந்து நிறைவுப் பெற்றது.


இந்நிகழ்ச்சியில் குழந்தைகள், பெரியோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.

இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஏராளமான தமிழர்களும் கலந்துக் கொண்டனர்.


நடைப்பயணம் சென்ற வழியில் துபாய் போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்திருந்தனர். நடைப்பயண நிகழ்ச்சி முடிந்த பின்னர் பர்ஜூமான் ஷாப்பிங் மாலில் மீண்டும் ஒன்று சேர்ந்த மக்களுக்காக நேரடி இசை நிகழ்ச்சி, பிங்க் ஷாப்பிங், சிறுவர்களுக்கான பெயிட்டிங் போட்டி, பெண்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை பர்ஜீமான் ஷாப்பிங் மால் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

நோக்கியா நிறுவனத்தில் சேர பிளஸ்-2 படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊதியம் ரூ. 4400 மற்றும் இலவச உணவுடன் ரூ. 10000-க்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ. சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும்.

பிளஸ்-2 வில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும்.

வங்கி எழுத்தர் பணி: பெண்களுக்கு இலவசப் பயிற்சி


பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர்கள் பணிக்கான தேர்வு குறித்த மூன்று நாள் இலவசப் பயிற்சி பெண்களுக்கு வியாழக்கிழமை (நவ. 5) முதல் தொடங்கவுள்ளது.

11 ஆயிரம் எழுத்தர் பணியிடங்கள் உள்ள இத்தேர்வு நவம்பர் 8 - ம் தேதி நடைபெறவுள்ளது.

"சக்ஸஸ் ஸ்கூல் ஆஃப் பாங்கிங்' என்ற நிறுவனம் இந்த இலவசப் பயிற்சியை நடத்துகிறது.

இதில் வேத கணித நுட்பங்கள் மூலம் கணிதக் கேள்விகளுக்கு துரித மற்றும் எளிதான தீர்வுகள், ஆங்கில இலக்கணம் உள்ளிட்டவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். சென்னை எழும்பூரில் உள்ள உலகப் பல்கலைக்கழக சேவை மையத்தில் பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் தேர்வு நுழைவுச் சீட்டு நகலுடன் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: 92822 33333, 93848 44405

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அளவிலான கிராமிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அளவிலான கிராமிய விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை (நவ. 2) தொடங்கி, செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது.

சாயர்புரம் போப் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழுப் போட்டிகளும், தடகளப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

LinkWithin

Blog Widget by LinkWithin