புதன், 2 நவம்பர், 2011

ஸ்ரீவைகுண்டத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை

ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளமான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து நகர பஞ்சாயத்து தலைவர் பி.அருணாசலம் ஆயில் மோட்டார்களை கொண்டுவந்து தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு மற்றும் காலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருத்துவர் காலனி, கணியான் காலனி, கருணாநிதிநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.

வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களை வீட்டில் இருந்து வெளியில் எடுக்கமுடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர பஞ்சாயத்து தலைவர் ஆயில் மோட்டார்களை கொண்டுவந்து மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

மழைக்காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் பள்ளமான பகுதிகளில் மண் அடித்து மேடாக்கவும் ரோடுகளில் தண்ணீர் தேங்கி பள்ளமாக உள்ள பகுதிகளை மேடாக்கி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், மழைக்காலமாக இருப்பதால் தெருக்களில் எரியாமல் உள்ள தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர பஞ்சாயத்து தலைவர் பி.அருணாசலம் கூறினார்

தகவல் : தூத்துக்குடி இணைதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin