வியாழன், 2 ஜூன், 2011

அதிக நேரம் செல் போன் பேசினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை


கைத்தொலைபேசி பயன்படுத்தாதவர்கள் யாராவது இருக்கிறார்‌களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்லும் அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் கைத்தொலைபேசியின் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது.

இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் கைத்தொலைபேசிகளை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப்படுத்துவதால் உடலில் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இருப்பினும் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கைத்தொலைபேசிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர்.

குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

கைத்தொலைபேசிகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

கைத்தொலைபேசிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் கைத்தொலைபேசிகள் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் கைத்தொலைபேசியை வாங்குகின்றனர்.

ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு கைத்தொலைபேசிகளை வாங்கினால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin