சனி, 29 ஆகஸ்ட், 2009

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் கேட்ட தொகைக்கு பாதி பணம்:


திருநெல்வேலி சந்திப்பு பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர் இருவருக்கு பாதித் தொகைக்கான பணம் மட்டுமே கிடைத்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு சி.என். கிராமத்தைச் சேர்ந்த ஆர். இசக்கி என்பவர் பணம் எடுக்க வந்தார்.அவர், ரூ.7 ஆயிரம் எடுக்க இயந்திரத்தை இயக்கினார். அவருக்கு கையில் கிடைத்தது ரூ. 3 ஆயிரம் மட்டும்தான். ஆனால், ரூ. 7 ஆயிரம் எடுக்கப்பட்டதாக ரசீது வந்தது. அதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அவருக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் சந்திரராஜ் நின்றார். அவருக்கு ரூ. 30 ஆயிரம் தேவைப்பட்டது. ஒரே நேரத்தில் ரூ. 30 ஆயிரம் எடுக்கமுடியாது என்பதால், அவர் முதலில் ரூ. 15 ஆயிரம் எடுக்க முயன்றார். பணம் கிடைத்தது. அதை சரிபார்க்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

இரண்டாவதாக ரூ. 15 ஆயிரம் எடுக்க முயன்றார். இரண்டாவது முறையாக கிடைத்த பணத்தையும் முதலில் எடுத்த பணத்தையும் சேர்த்து எண்ணினார். ரூ. 30 ஆயிரத்திற்குப் பதிலாக ரூ. 17,500 மட்டுமே இருந்ததைத் அறிந்து அதிர்ச்சியடைந்தார். ஆனால், தலா ரூ.15ஆயிரம் எடுக்கப்பட்டதாக ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அங்கிருந்த காவலாளியிடம் இருவரும் புகார் தெரிவித்தனர். இந்த தகவல், வங்கி அதிகாரிகளுக்கு தெரிய வந்ததும், ஏடிஎம் மையம் தாற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர், வங்கி தலைமை மேலாளர் கோமதிநாயகம் கூறியதாவது:
வாடிக்கையாளர் இருவருக்கு பணம் குறைவாக கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மனு எழுதிக் கொடுத்து மீதிப் பணத்தை வங்கியில் பெற்றுச் கொள்ளலாம்.
பணம் எடுக்கும்போது மின்தடை ஏற்பட்டு இருந்தால் இதுபோன்று சம்பவங்கள் நேரிட வாய்ப்பு உள்ளது.
ஏடிஎம் இயந்திரங்களில் அவ்வப்போது ஏற்படும் சிறிய பழுதுகள் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin