செவ்வாய், 1 மார்ச், 2011

நாம் பிடித்த புலிவால் வாழ்க்கை!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


பிறக்க ஓர் இடம்!

பிழைக்க ஓர் இடம்!

இதுதான் என் சமுதாய

மக்களின் வாழ்வாகிவிட்டது!

நம் முன்னோர்களுக்கோ

பர்மா, ரங்கூன், மலேசியா!

எங்களுக்கோ வளைகுடா!

இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்

அங்கும் தொடருமா?

எங்கள் வாரிசுகள்?


வளைகுடா வசந்தம் என்றார்கள்!

முன்னால் கால் வைத்த

மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!

வைத்த காலை எடுக்க முடியவில்லை

ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த

எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!

சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது

எம்முடைய பயணமோ

திக்குத்தெரியாமல்

வளைகுடாவை நோக்கியே!


ஊர் சென்றால் நம்

சுமைகளை சுமந்து செல்வதில்

அலாதி ஆனந்தம் நம்

கையெல்லாம் சிவக்க சுமப்போம்

அடுத்த தடவை சுதந்திரபறவைதான்

ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்

காற்றோடு போகும்! மீண்டும் சுமை!


மனைவி மக்களை பார்த்தால்

மன சந்தோஷம் ஆனால்

நம்முடைய கையிருப்பும்

எடுத்த விடுப்பும்

கரைய கரைய மனதில் பீதி!

வெளியிலோ புன்(பொய்)சிரிப்பு!


எத்தனை கொடுத்தாலும்

போதுமென்ற மனம் இல்லை

இதுதான் கொண்டு வந்தாயா?

நம் உள்ளமோ வேதனையில்

கொடுத்த பொருள் நன்றாக

இருந்தது என்று சொல்லி விட்டால்

தங்கப்பரிசு வாங்கிய சந்தோஷம்!

சொல்லத்தான் மனமில்லை!


கண்ணீரோடு குடும்பத்தை

பிரிந்த நாம் சொல்வது

இரண்டு வருடம்தான்!

முடித்து விட்டு போய்விடுவோம்

பல பிரச்சனைகளில்

மறந்தே விடுவோம்!

இதுதான் தொடர்கதையான

வளைகுடா வாழ்க்கை!


சகோதரிகள் திருமணம் முடித்து

வீட்டையும் கட்டி விட்டு

தொழிலுக்கு பணத்தோடு

ஊரில் தங்கிவிட வேண்டும்!

எல்லாம் முடிந்து

நாமும் குடும்பத்தலைவன்

ஆன பிறகு மீண்டும்

அதே பழைய இடம்

வீடு பிள்ளைகள் திருமணம்

ஊரில் நிரந்தரம் என்பதும்

கனவாய் போனதே!


வழி அனுப்ப வாகனத்தில்

வந்த பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி!

விமான நிலையத்தில் நாம்

உள் நுழைவதை பார்த்தவுடன்

அவர்கள் முகத்திலோ ஒரு சோகம்!

இங்கு வந்தவுடன் தொலைபேசி அழைப்பு

ஏன் வாப்பா உள்ளே சென்ற தாங்கள்

திரும்பி வரவில்லை என்ற தேம்பல் அழுகை

என்ன சொல்லி சமாளிக்க!

நம் நெஞ்சோ சோகத்தால் கனக்க!

குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி

இல்லையா என்று உள்ளம் கலங்க

என்ன செய்வோம் எத்தனை காலம்

இந்த அடிமை வாழ்க்கை!

நாம் பிடித்தது புலி வால் அல்லவா?


ஊருக்கு சென்று தொழில் வைக்கலாம்

எல்லோரும் சொல்லும் வார்த்தை!

சென்றவர்கள் சில காலம் கழித்து

மீண்டும் வளைகுடா வாழ்க்கையில்!

ஊரில் நிரந்தரமாகி விட வேண்டும்

என்ற உறுதி இவர்களைப் பார்த்தால்

குலைந்துவிட என்ன செய்ய

மீண்டும் மனப்போராட்டம்!


ஊரில் சிறு தொழில் வைக்காதே

பெரிதாக தொழில் தொடங்கு

ஆலோசனை இலவசம்!

பணத்தை எந்த மரத்தில் பறிக்க

காலம் இப்படியேதான் போகுமா?

குடும்பத்தோடு சேர்ந்து

வாழ்வது எப்பொழுது?


கல்வி இல்லாமல் வந்தவர்கள்

கஷ்டப்படும் நிலையை பார்த்து

கல்வியை கற்றுக்கொண்டு வா!

என்றார்கள், கல்வி கற்று வந்ததும்

நல்ல வேலை மனைவி மக்களுடன்

வாழ்க்கை சிலருக்கு!

கல்வி கற்ற பலர் தனிமரமாக!


ஊரில் கணக்கில்லா சொத்து

உள்ளவனை பார்த்து

ஏன் இங்கு வந்தாய் என்றால்

இங்கு உள்ள சுகாதாரம்

ஊரில் வருமா அதனால்தான் என்றான்?

இங்கு வந்து வாழும்

குடும்ப பெண்களிடம்

கேட்டால் ஊர் போல் வருமா

வளைகுடா என்றார்கள்!


நாம் இழந்தது என்ன?

தாய் தந்தை சேவையை!

குடும்பத்தின் சுக துக்கத்தை!

நம் உறவுகளின் அனுசரணையை!

தென்றல் வீசும் காற்றை!

மழலையின் வார்த்தையை!

மழையின் மண்வாசனையை!


பள்ளி விட்டு வந்ததும்

பள்ளியின் கதை சொல்ல

தந்தையை தேடும்

பிள்ளை செல்வங்களை!

தந்தையுடன் செல்லும்

பிள்ளைகளை பார்த்து

நம் தந்தை அருகில்

இல்லையே என்று வாடும்

நம் பிஞ்சுகள் இழக்கும் சந்தோஷத்தை!


வாகனத்தில் செல்லும்பொழுது

சாலைகளில் இருபுறமும்

பசுமை மரங்களோடு

சேர்ந்து வரும் தென்றலை!

இன்னும் நிறைய!

பணம் உண்டு இங்கு

நம் மனம் மட்டும் ஊரில்!

இயந்திரத்தனமாக தொடர்கிறது

புலிவாலை பிடித்த வாழ்க்கை!

ஈமெயில் உதவி : ஜனாப் . இப்ராகிம்.ACM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin