செவ்வாய், 13 அக்டோபர், 2009

பிரமாண்டமான பலூன்


பலூன் இலேசானது. ஆனால் எப்போதும் நம்மை வியக்கவைப்பது. திருவிழா என்றாலே எங்கிருந்தோ வந்துசேரும் பலூன் தாத்தாக்கள் விதவிதமாக முடிச்சிட்ட பலூன்களுக்குள் காற்றை நிரப்பி விற்பதை ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறோம். பலூனை விரும்பாத குழந்தைகள் இல்லை எனலாம்.



39 வயதான நியூயார்க் கலைஞர் ஜாஸன் ஹேக்கன்யெர்த்துக்கும் அப்படித்தான். பலூன் பைத்தியமான இவர் 40 அடி உயரத்திற்கெல்லாம் பலூன் சிற்பங்களைப் படைத்து அசத்துகிறார். இவருடைய கைவண்ணத்தில் உருவாகும் வேற்று கிரக தோற்றமுடைய, பிரமாண்டமான பலூன்களை இரவு பார்ட்டிகளில் வைத்து வேடிக்கைப் பார்க்க முடியாது. குழந்தைகளுக்காகத்தான் இவற்றை செய்கிறார். ஆனால் செய்து முடித்ததும் குழந்தைகள் விளையாட முடியாத அளவுக்கு அவை பிரமாண்டமாக பயமுறுத்தும் வகையில் உருமாறி நிற்கின்றன.



இந்த பிரமாண்டமான பலூன் சிற்பங்களை உருவாக்க பல மணிநேரங்களை செலவழிக்கும் ஜாஸன் அதற்காக மொத்தமாக 5 ஆயிரம் பலூன்களைக் கூட ஒரே சமயத்தில் வாங்கி பயன்படுத்துகிறார்.



“திட்டமிடவும், வரைந்து பார்க்கவும் பல மணி நேரம் ஆகிறது. கடல் சார்ந்த அல்லது வேற்று கிரக ஜீவன்களை ப் போல் உருவம் கொண்டுவர பல நுணுக்கமான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது” என்று சொல்லும் ஜாஸன் தான் செய்யும் பலூன் சிற்பங்களை கடற்கரைப் பகுதி அல்லது வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று புகைப்படம் எடுத்து திரும்புகிறார். அப்போது அவற்றுக்கு உயிர் வந்ததுபோல் தோற்றம் கிடைத்துவிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin