வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

நம்ப முடிகிறதா? சென்னைக்கு வயது 370


தமிழகத்தின் தென்கோடியில் இருந்து வரும் மக்களானாலும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களானாலும் சென்னையில் வந்து வசிப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.

அதற்கெல்லாம் காரணம் தமிழக தலைநகரம் சென்னையின் கட்டமைப்பு வளர்ச்சி, மேம்பாலங்கள், சாலை போக்குவரத்து, புறநகர் ரயில் சேவைகள், கடற்கரை அழகு, வணிக வளாகங்கள், ஐ.டி. பூங்காக்கள், சிறந்த ஒளி-ஒலி வசதியைக் கொண்ட திரையரங்குகள், மல்டி-பிளக்ஸ் என எண்ணற்ற காரணங்களைச் சொல்ல முடியும்.

ஆனால், இன்று ஒரு மெட்ரோ நகரமாக உருவெடுத்து வியாபித்திருக்கும் சென்னை தோன்றி எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன தெரியுமா? ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னைக்கு 370ஆவது பிறந்த நாள்.

ஆம். கடந்த 1,639ஆம் ஆண்டில் மீன்பிடி கிராமமாக விளங்கிய சென்னையில் சிறிய, சிறிய குடிசைகள் மட்டுமே வீடுகளாக இருந்தன.

சென்னை துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் தான் மக்கள் வசித்தார்கள். மீன்பிடி கிராமமாக இருந்த இந்நகரை சென்னப்ப நாயக்கர் என்பவர் நிர்வகித்ததாக வரலாறு கூறுகிறது.

அவரது பெயரைக் கொண்டே சென்னை என்ற பெயர் வைக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்திற்கு அருகே `சென்னைப் பட்டணம்' என்ற நகரைக் கட்டுவதற்கு சென்னப்ப நாயக்கரிடம் இருந்து அப்போதைய பிரிட்டிஷ் நிர்வாகியான ஃபிரான்சிஸ் டே என்பவர் அனுமதியைப் பெற்று சில பகுதிகளை உருவாக்கினார். இத்தகவல் பிரிட்டிஷாரின் தகவல்களில் இருந்து தெரிய வருகிறது.

`மெட்ராஸ் டே' என்ற பெயரில் சென்னை தோன்றிய தினம் ஒரு வார காலம் கொண்டாடப்படுகிற்து.

சென்னையின் பாரம்பரியம், இலக்கிய செயல்பாடுகள், முக்கிய இடங்கள் மற்றும் அடையாளச் சின்னங்கள் குறித்த கண்காட்சிகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.

பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சிகள், பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகள், கர்நாடக இசை நிகழ்ச்சிகள், வினாடி-வினா, உணவுத் திருவிழாக்கள், பேரணிகள், புகைப்படக் கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.

தற்போது சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் சென்னையைப் பற்றி அறிந்திராத தகவல்களும் இந்த ஒரு வார கால கொண்டாட்டத்தின் போது வெளிப்படுத்தப்படுவது சிறப்பம்சமாகும்.

சரி, சென்னையின் பிறந்த நாளுக்கு அந்த மாநகரில் வசிக்கும் நாமும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

1 கருத்து:

LinkWithin

Blog Widget by LinkWithin