வியாழன், 21 மே, 2009

கடைசி நேரத்தில் 2000 ராணுவத்தினரைக் கொன்ற புலிகள்-படகு மூலம் தப்பினார் பிரபாகரன்-நக்கீரன்

விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த கடைசி நேர மோதலின்போது 60 கரும்புலிகள் (தற்கொலைப் படையினர்) சேர்ந்து கிட்டத்தட்ட 5000 கிலோ வெடி மருந்துகளை தங்களது உடலில் கட்டிக் கொண்டு ராணுவத்தினர் மீது நடத்திய அதி பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 3000க்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டனராம்

இதை விட முக்கியமாக, இந்த அதி பயங்கர தாக்குதலால் ராணுவம் நிலை குலைந்ததைப் பயன்படுத்தி அதி நவீன படகு மூலம் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் தப்பி விட்டதாகவும் நக்கீரன் வார இதழ் செய்தி
வெளியிடப்பட்டுள்ளது

பிரபாகரனின் கடைசி நிமிடங்கள் என்று கூறி இலங்கை ராணுவம் ஒரு செய்தியை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நக்கீரன் கூறுவதாவது...

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம்.

மே 16ம் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பெரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள் . நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்

புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் லட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள்.

பிரபாகரன் வெளியேற கட்டளையிட்ட தளபதிகள்..

அதனால், மே 17ம் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்

தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏனென்றால், சிங்கள ராணுவம் தனது பெரும் படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய லட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம்

நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழ மண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லி விட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து, மே 17ம் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம்.

மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 புலிகள்-5000 கிலோ வெடிகுண்டுகள்..

5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 60க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட்டத்தின்படி இருவரணி, மூவர் அணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர்.

விடுதலைப் புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்கவில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாதுகாப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

தப்பினார் பிரபாகரன்...

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்

அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழைய காலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்

பொட்டு அம்மான் வெளியேறினார்..

அதே வேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி.

சூசையும் வெளியேறினார்...

புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, லட்சியத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.

2,000 ராணுவத்தினர் சிதறிப் பலி...

புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்புலித் தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர்.

பலியானார் சார்லஸ் அந்தோணி...

இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார்.

புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்

வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கி விடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற்றத்தை முடக்கியது.

அதிவேக படகில் தப்பினர்..

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகியோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்தியமானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன்படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக் கூடியது.

உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமிடங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விடலாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையிலிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கடற்படை தடுக்கவில்லை?

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது.

ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுத்தங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது.

அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத் தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது.

பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டலமாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக்குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன

ஞாயிறு இரவிலும் திங்கள் காலையிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெருமளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதிகளின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது

புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்

மொக்குச் சிங்களவர்கள்.. கருணா புலம்பல்

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர்களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம்.

புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள் எனத் தனது சகாக்களிடம் சொன்னாராம்

இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது

பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்பிங்குகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக்கெட்டில் சயனைடு குப்பி வைத்திருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. அடையாள அட்டை காட்டப்பட்டது

இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்பிங்குகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தசாவதாரம் படம் போல...

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது.

இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதியான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான்

அதேபோல, பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்ட பிறகு, பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங்களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கிறார்கள் மிகமிக முக்கியமானவர்கள்.

இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நக்கீரன் செய்திக் கட்டுரை தெரிவிக்கிறது

தகவல் : நக்கீரன் & தட்ஸ்தமிழ்

1 கருத்து:

  1. பெயரில்லா24 மே, 2009 அன்று PM 1:50

    பாவம் யாழ் வாழ் அப்பாவிப் பொதுமக்கள்... சாவு, காயம், பசி என என்னென்ன துன்பங்களோ ? அகதி முகாம்களில் போதுமான கழிவறைகள் போலும் இல்லை என இலங்கை அரசே சொல்லுகிறது ...

    ஒன்றல்ல இரண்டல்ல.... மூன்று லெட்சம் இந்திய வம்சாவளியினர்

    இறைவா ஏன் இந்த அவலம் .... ?

    100 அமேரிக்கர்களுக்கோ, 100 பிரிட்டானியர்களுக்கோ இதே கதி ஏற்பட்டால் அமேரிக்காவும் பிரிட்டனும் என்ன என்ன செய்யும் ? ஆனால் ...இந்தியர்கள் கதி ?

    நான் புலிகளின் அபிமானி அல்ல... தீவிரவாதத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை...

    ஒரு தனி மனிதன் என்ற விதத்தில் இந்த பின்னூட்டை இடுகிறேன்


    மனவருத்தத்துடன்
    விநாயக் (இணையப்பெயர்)

    http://my2cw.blogspot.com/

    பதிலளிநீக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin