புதன், 23 டிசம்பர், 2009

அனிதா ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி: திமுகவினர் கொண்டாட்டம்


திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அம்மன் டி நாராயணனை விட 46,861 வாக்குகள் அதிகம் பெற்று, திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். திமுகவினர் இந்த வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

திருச்செந்தூர் தொகுதியில் இதுவரை அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று தமிழகத்தில் அமைச்சராக வலம் வந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். அதிமுக தலைமைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட மோதலில் அக்கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் தனது தொண்டர்கள் 10 ஆயிரம் பேருடன் அதிரடியாக திமுகவில் இணைந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி, அனிதாவிற்கு திருச்செந்தூர் தொகுதியையும் அமைச்சர் பதவியும் தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில் அனிதா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து திருச்செந்தூர் தொகுதயில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 19ம் தேதி நடந்த திருச்செந்தூர் இடைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. துவங்கியதிலிருந்தே அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து வந்தார். மொத்தம் 14 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் 14வது சுற்றின் முடிவில் திமுக 75,223 வாக்குகளும், அதிமுக 28,362 வாக்குகளும், தேமுதிக 4186 வாக்குகளும் பெற்றன.

இதனையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளரை விட 46,861 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். திருச்செந்தூர், உடன்குடி, ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் திமுக நிர்வாகிகளும், அனிதா ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்தும் , இனிப்பு வழங்கியும் தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

செய்தி : தூத்துக்குடி வெப்சைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin