வெள்ளி, 8 மே, 2009

விமான கட்டணம்..'தெளிவா சொல்லுங்க!' - அரசு உத்தரவு

உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அனைத்தும் இனி பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுத்தாத தெளிவான கட்டணங்களை தங்கள் விளம்பரங்கள் மற்றும் இணையதளங்களில் தெரிவிக்க வேண்டும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பொதுவாக தனியார் விமான நிறுவனங்கள், பயணிகளைக் கவர குறைந்த கட்டணம் என்று கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிடுகின்றன. உதாரணத்துக்கு, 'சென்னை - பெங்களூர் ரூ.77 மட்டுமே' என விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் நேரில் போய் விசாரித்தால், இந்தக் கட்டணத்துடன் ஏர் ப்யூயல் சார்ஜ் மற்றும் சர்சார்ஜ் எனும் பெயரில் ரூ.2900 செலுத்த வேண்டும் எனக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்துவார்கள்.

இன்னும் சில குறைந்த கட்டண விமானங்கள் பூஜ்யம் கட்டணம் என்று விளம்பரப்படுத்தி மக்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, நேரில் விசாரிக்கும்போது, ரூ.3100 வரிகளாக மட்டும் செலுத்தினால் போதும் என வெறுப்பேற்றுவார்கள். இது குறித்து வழக்கமான பயணிகள் புகார் கூறாவிட்டாலும், நடுத்தர மக்கள் விமானப் போக்குவரத்துத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்

தேவையின்றி ஆவலைத் தூண்டிவிட்டு, தங்கள் பணத்தைப் பிடுங்குவதாக நேரடியாகவே சில விமான நிறுவனங்கள் மீது ஆதராத்துடன் அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். அரசுத் துறை விமானமான ஏர் இந்தியா மட்டுமே இதற்கு விதிவிலக்கு

இதனால் இப்போது மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் நஸீம் ஜைதி ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்

அடுத்த 30 நாட்களுக்குள், அனைத்து விமான நிறுவனங்களும் தங்கள் விளம்பரங்கள் மற்றும் இணையதளங்களில் பொதுமக்களை ஏமாற்றும் விதத்தில் தந்துள்ள விவரங்கள் அனைத்தையும் மாற்றியாக வேண்டும் என்றும், 'சலுகைகள், வரிகள், கூடுதல் கட்டணங்கள் அனைத்தையும் சேர்த்து ஒரே கட்டணம் இதுதான்' என தெளிவாகக் குறிப்பிட்டாக வேண்டும் என்றும் தனது உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த உத்தரவுஇந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவை மையப்படுத்தி இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும். 30 நாட்களுக்குப் பிறகு தங்களின் புதிய விளம்பரங்கள் மற்றும் திருத்தப்பட்ட கட்டண விவர அறிவிப்புகளை ஒரு அறிக்கையாக விமானப் போக்குவரத்து இயக்ககத்துக்கு தெரிவி்த்தாக வேண்டும்.

அதுமட்டுமல்ல, இனி கட்டண விஷயத்திலும் விமானப் போக்குவரத்து இயக்ககம் தலையிடும். சில குறிப்பிட்ட விமான நிறுவனங்கள் மட்டும் கூட்டு சேர்ந்து அதிகக் கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் இறங்கினாலோ அல்லது தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்தினாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவித்துள்ளார் ஜைதி.

தகவல் : தட்ஸ்தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin