வெள்ளி, 6 மார்ச், 2009

திருக்குர்ஆன்

குர் ஆன் இதன் வருகை வானத்திலிருந்து!
இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !
இது பூத்தபின்தான் மானுடம் தன் மணத்தை நுகர்ந்தது !
மவுனம் வாய் திறந்து தன் மனத்தைப் பகர்ந்தது.

கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம் கறுப்பல்ல !
கொட்டும் இந்தக் குர்ஆன் எனும் மழை முகிலின் நிறம் கறுமையல்ல !
திட்பமும் நுட்பமும் கொண்ட இதன் தீர்ப்புகள் – வைகறை வாசகங்கள்;மறுதலிக்கவொண்ணா வாக்கியங்கள் !

இது துயிலெழுப்பும் சூரியன்தான். எனினும் தொடுகின்ற இதன் கரங்கள் சுடாதவை; தூசுப் படாதவை !
இது நினைவூட்டும் நல்லவைகளை !
இது நறுக்கெனச் சாடும் அல்லவைகளை !
இதைப் படித்தவர்கள்தாம் உண்மையில் படித்தவர்கள் !
இதைப் பாராதவர்கள் தங்களைப் பாராதவர்கள் !உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே இதற்குள்தான் உள்ளது !
இது ஒப்பனை இல்லாதது; கற்பனை இல்லாதது !
இதன் சுவடுகள் மலைக்கும் எளிய வழிகாட்டும்;அலைக்கும் அழியா நிலைகாட்டும் !

துடுப்புகள் தேவையில்லை இந்தத் தோணிக்கு !
கண்களும் தேவையில்லை இதன் வாசிப்புக்கு !

இது காட்டிய மனிதச் சங்கிலியில் கையுள்ளோரெல்லாம் கலந்து கொள்ளலாம்;கவுரவம் பெறலாம்.

இதன் இருக்கையோ உச்சரிக்க முடியாத உயரத்தில் !
இதன் இறக்கையோ உவமிக்க முடியாத அதிசயத்தில் !

தொல்லியலா? இது சொல்லிக் கொடுக்கும்.அறிவியலா?
இது அள்ளிக் கொடுக்கும்.இல் இயலா?
இது எடுத்துக் கொடுக்கும். அரசியலா?

இது அடுத்துக் கொடுக்கும். பட்டறையில் உருவாகும் ஊசிக்கும் பருத்திக் கூட்டணியில் உருவாகும் நூலுக்கும் இது இணைப்புப் பாலமாக இராதிருந்தால் அழகு உடையை உலகம் அணிந்திருக்காது .

இது பிறந்து வந்த பிறகுதான் பெண்ணியம் பெற்றது கண்ணியம் !
பிறந்தகம் கண்டது புண்ணியம் !

இது ஓதுவதற்கு வந்ததென்றாலும் வெறுமனே பேசுவதற்கு வரவில்லை.
செல்வர்களே, உங்கள் செல்வத்தில் ஏழைகளுக்குப் பங்குண்டு;
கேட்க வெட்கப்படுபவர்களுக்கும் பங்குண்டு; என்ற இதன் இரட்டை வரிகளும் முழுமையாக உலகம் ஏற்றால் பரட்டைத் தலையும் இல்லை; பஞ்சக் குறட்டையும் இல்லை.

குர்ஆன்குளிக்கக் கிடைத்த குற்றால சோப்பு !
களிக்கக் கிடைத்த கற்கண்டு சூப்பு !
பசிக்குக் கிடைத்த பண்பாட்டு விருந்து !
நோய் தீர்க்கக் கிடைத்த நூதன மருந்து !

தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
நன்றி : சமரசம் 16-28 பிப்ரவரி 2009 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin