செவ்வாய், 1 மார்ச், 2011

நாம் பிடித்த புலிவால் வாழ்க்கை!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


பிறக்க ஓர் இடம்!

பிழைக்க ஓர் இடம்!

இதுதான் என் சமுதாய

மக்களின் வாழ்வாகிவிட்டது!

நம் முன்னோர்களுக்கோ

பர்மா, ரங்கூன், மலேசியா!

எங்களுக்கோ வளைகுடா!

இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்

அங்கும் தொடருமா?

எங்கள் வாரிசுகள்?


வளைகுடா வசந்தம் என்றார்கள்!

முன்னால் கால் வைத்த

மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!

வைத்த காலை எடுக்க முடியவில்லை

ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த

எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!

சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது

எம்முடைய பயணமோ

திக்குத்தெரியாமல்

வளைகுடாவை நோக்கியே!


ஊர் சென்றால் நம்

சுமைகளை சுமந்து செல்வதில்

அலாதி ஆனந்தம் நம்

கையெல்லாம் சிவக்க சுமப்போம்

அடுத்த தடவை சுதந்திரபறவைதான்

ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்

காற்றோடு போகும்! மீண்டும் சுமை!


மனைவி மக்களை பார்த்தால்

மன சந்தோஷம் ஆனால்

நம்முடைய கையிருப்பும்

எடுத்த விடுப்பும்

கரைய கரைய மனதில் பீதி!

வெளியிலோ புன்(பொய்)சிரிப்பு!


எத்தனை கொடுத்தாலும்

போதுமென்ற மனம் இல்லை

இதுதான் கொண்டு வந்தாயா?

நம் உள்ளமோ வேதனையில்

கொடுத்த பொருள் நன்றாக

இருந்தது என்று சொல்லி விட்டால்

தங்கப்பரிசு வாங்கிய சந்தோஷம்!

சொல்லத்தான் மனமில்லை!


கண்ணீரோடு குடும்பத்தை

பிரிந்த நாம் சொல்வது

இரண்டு வருடம்தான்!

முடித்து விட்டு போய்விடுவோம்

பல பிரச்சனைகளில்

மறந்தே விடுவோம்!

இதுதான் தொடர்கதையான

வளைகுடா வாழ்க்கை!


சகோதரிகள் திருமணம் முடித்து

வீட்டையும் கட்டி விட்டு

தொழிலுக்கு பணத்தோடு

ஊரில் தங்கிவிட வேண்டும்!

எல்லாம் முடிந்து

நாமும் குடும்பத்தலைவன்

ஆன பிறகு மீண்டும்

அதே பழைய இடம்

வீடு பிள்ளைகள் திருமணம்

ஊரில் நிரந்தரம் என்பதும்

கனவாய் போனதே!


வழி அனுப்ப வாகனத்தில்

வந்த பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி!

விமான நிலையத்தில் நாம்

உள் நுழைவதை பார்த்தவுடன்

அவர்கள் முகத்திலோ ஒரு சோகம்!

இங்கு வந்தவுடன் தொலைபேசி அழைப்பு

ஏன் வாப்பா உள்ளே சென்ற தாங்கள்

திரும்பி வரவில்லை என்ற தேம்பல் அழுகை

என்ன சொல்லி சமாளிக்க!

நம் நெஞ்சோ சோகத்தால் கனக்க!

குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி

இல்லையா என்று உள்ளம் கலங்க

என்ன செய்வோம் எத்தனை காலம்

இந்த அடிமை வாழ்க்கை!

நாம் பிடித்தது புலி வால் அல்லவா?


ஊருக்கு சென்று தொழில் வைக்கலாம்

எல்லோரும் சொல்லும் வார்த்தை!

சென்றவர்கள் சில காலம் கழித்து

மீண்டும் வளைகுடா வாழ்க்கையில்!

ஊரில் நிரந்தரமாகி விட வேண்டும்

என்ற உறுதி இவர்களைப் பார்த்தால்

குலைந்துவிட என்ன செய்ய

மீண்டும் மனப்போராட்டம்!


ஊரில் சிறு தொழில் வைக்காதே

பெரிதாக தொழில் தொடங்கு

ஆலோசனை இலவசம்!

பணத்தை எந்த மரத்தில் பறிக்க

காலம் இப்படியேதான் போகுமா?

குடும்பத்தோடு சேர்ந்து

வாழ்வது எப்பொழுது?


கல்வி இல்லாமல் வந்தவர்கள்

கஷ்டப்படும் நிலையை பார்த்து

கல்வியை கற்றுக்கொண்டு வா!

என்றார்கள், கல்வி கற்று வந்ததும்

நல்ல வேலை மனைவி மக்களுடன்

வாழ்க்கை சிலருக்கு!

கல்வி கற்ற பலர் தனிமரமாக!


ஊரில் கணக்கில்லா சொத்து

உள்ளவனை பார்த்து

ஏன் இங்கு வந்தாய் என்றால்

இங்கு உள்ள சுகாதாரம்

ஊரில் வருமா அதனால்தான் என்றான்?

இங்கு வந்து வாழும்

குடும்ப பெண்களிடம்

கேட்டால் ஊர் போல் வருமா

வளைகுடா என்றார்கள்!


நாம் இழந்தது என்ன?

தாய் தந்தை சேவையை!

குடும்பத்தின் சுக துக்கத்தை!

நம் உறவுகளின் அனுசரணையை!

தென்றல் வீசும் காற்றை!

மழலையின் வார்த்தையை!

மழையின் மண்வாசனையை!


பள்ளி விட்டு வந்ததும்

பள்ளியின் கதை சொல்ல

தந்தையை தேடும்

பிள்ளை செல்வங்களை!

தந்தையுடன் செல்லும்

பிள்ளைகளை பார்த்து

நம் தந்தை அருகில்

இல்லையே என்று வாடும்

நம் பிஞ்சுகள் இழக்கும் சந்தோஷத்தை!


வாகனத்தில் செல்லும்பொழுது

சாலைகளில் இருபுறமும்

பசுமை மரங்களோடு

சேர்ந்து வரும் தென்றலை!

இன்னும் நிறைய!

பணம் உண்டு இங்கு

நம் மனம் மட்டும் ஊரில்!

இயந்திரத்தனமாக தொடர்கிறது

புலிவாலை பிடித்த வாழ்க்கை!

ஈமெயில் உதவி : ஜனாப் . இப்ராகிம்.ACM

திங்கள், 28 பிப்ரவரி, 2011

சீரழிக்கும் செல்போன்-இன்டர்நெட்; சிந்திப்பீர் பெற்றோர்களே!

ஆக்கம் : டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி, ஐ.பீ.எஸ்(ஓ)

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கிலாந்து பிரதமராக ஆகுவதிற்கு முன்பாக வின்ஸ்டன் சர்ச்சில் சாதாரண பிரிட்டிஸ் டூரிஸ்ட்டாக சென்னை வந்திருந்திருந்து அண்ணா சாலையில் முன்பு இருந்த அரசு வளாக(கவர்மெண்ட் எட்டேட்ஸ்) அட்மிராலிட்டி கட்டிடத்தில் ஒரு அறையில் தங்கிருந்தாராம். அவருக்கு அடுத்த அறையில் பிரிட்டிஸ் இந்தியாவின் மிலிட்ரி கர்னல் ஒருவர் தங்கி இருந்தாராம். அப்போது கர்னல் போனில் லண்டனுக்கு சப்தம் போட்டு பேசினாராம்.

அவர் பேசிய சப்தம் கேட்டு வின்ஸ்டன் சர்ச்சில் அவருடைய அறையினை விட்டு வெளியே வந்து அங்கிருந்த காவலாளியைக் கூப்பிட்டு அந்த அறையில் தங்கிருந்தவர் யார் எனத் தெரிந்து கொண்டு காவலாளியிடம், ‘நீங்கள் போய் உங்கள் கர்னலிடம சொல்லுங்கள் அவருடன் பேசுகிறவர் லண்டனில் இருக்கிறார். அது தெரியாது கர்னல் நேராக இருப்பது போன்று சப்தம் போடுகிறார் என்று சொன்னாராம். இதனை ஏன் குறிப்பிடுகிறேனென்றால், முன்பு இருந்த தொலைபேசி அடுத்தவர்க்கு தொல்லை பேசியாக இருந்ததாம்.

ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் தொலை பேசிக்கே வேலையில்லாது கைபேசி வந்து விட்டது. ஆனால் அதே தொலைபேசி இளசுகளை சீரழிக்கும் கைபேசியாக மாறிவிட்டது தான் இன்றைய சமுதாயத்திற்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

செல்போன் வந்தபிறகு வயர் இணைப்பிற்கு முக்கியத்துவம் இல்லாத நிலமை வந்துவிட்டது. சாதாரண கூலி முதல் கோமான் வரை சட்டைப் பையில் கொண்டு செல்லும் அத்தியாசிய பொருளாக மாறிவிட்டது ஆச்சரிமில்லைதான். செல்போனின் முக்கிய செயல்பாடுகளை தெரியாதவர்கள் இல்லை யென்றே சொல்லலாம். இருந்தாலும் சில முக்கிய செயல்பாடுகளை இங்கே சொல்லலாம் என நினைக்கின்றேன்:

1) அட்ரஸ் கையெடு 2) அழைப்பவர் பட்டியல் 3) வீடியோ பங்கிடுதல் 4) படம் எடுத்தல் 5) கான்ப்ரன்ஸ் நடத்துதல் 6) மெஸேஜ் அனுப்புதல் 7) எல்லோ பேஜ் என்ற வர்த்தக விளம்பரம் 8) டி.வி 9) இசை 10) செய்தி ஒளிபரப்பு 11) மொபைல் பேங்கிங்க் 12) தட்ப வெப்ப நிலையறிதல் 13) இன்டர்நெட் 14) நோட் புத்தகம் 15) உலக மணி 16) உலக நாணயம் 17) உலக தேதி 19) எழுப்பும் மணி 20) கால்க்குலேட்டர் 21) புளு டூத் 22) இடங்களை எழிதாக கண்டு பிடிக்கும் ஜி.பி.எஸ், ஜி.பி.ஆர்.எஸ்

மேற்கூறிய உபயோகங்கள் சிலவகை தான். இன்னும் அதன் பயன்பாடுகள் உலகம் விசாலமானது என்பதினை மாற்றி உலகம் கைக்குள் அடங்கிருக்கிறது என்று சொல்லுமளவிற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

1964 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் புயல் ஏற்பட்டு பாம்பன் பாலத்தில் சென்ற ராமேஸ்வரம் ரயில் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். தனுஷ்கோடி தீவு முற்றிலுமாக ராமேஸ்வரத்துடனான தொடர்பு துண்டிக்கபட்டது. அப்போது அந்த தீவில் இருந்த பெரும்பாலோர் இறந்து விட்டனர். அந்த சம்பவத்தினை அந்த தீவிலிருந்த டெலக்கிராப் ஆப்பரேட்டர் மோர்ஸ் தொடர்பு மூலம் சென்னைக்கு தகவல் அனுப்பினார். அதனை வைத்துதான் உடனே மீட்பு நடவடிக்கை எடுக்கவும் முடிந்தது. அந்த சம்பவம் நான் பி.யு.சி மாணவனாக இருந்தபோது நடந்தது. ஆனால் தொலை தொடர்பில் ஏற்பட்ட சேட்லைட் வளர்ச்சி அபாரமானது என்பதினை இரண்டு சம்பவங்கள் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன். ஒன்று சிலி நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 2000 அடிக்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் விபத்து ஏற்பட்டு சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதினை ஒரு துளைபோட்டு அதில் ஒரு செல்போன் செலுத்தி தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் உயிருடன் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீட்கும் வரை வீடியோ கான்ப்ரன்ஸிலும் தங்கள் குடும்பத்தாருடன் பேசி மகிழ்ந்தது அனைவரும் பார்த்திருப்பார்கள்.

2) அதே போன்று விண்வெளியில் பயணம் செய்த கல்பணா சவ்லா போன்ற வீரர்கள் தங்கள் சாதனை முடிந்து வாயு மண்டலத்தினை தொடும் வரை தரைக்கட்டுப்பாட்டுடன் பேசிக் கொண்டு வந்தது அனைவரும பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்பு தான் அவர்கள் விபத்தில் மரித்தார்கள்.

ஆகவே தொலை தொடர்பு வளர்ச்சி பரிணாமமானது என்பதினை எல்லோரும் அறிவர்.
இந்திய நாடு பொருளாதாரத்தில் 8.9 சதவீத வளர்ச்சியடைந்து வளரும் நாடு என்ற நிலையிலிருந்து அமெரிக்கா ஜனாதிபதி பாரக் ஒபாமா சமீபத்தில் இந்திய நாட்டுக்கு வருகை தந்தபோது சொல்லியது போல வளர்ந்த நாடாக திகழ்கிறது. முன்பெல்லாம் கம்பஞ் சோறும், கேப்பைக்களியும், குருனைக் கஞ்சியுடனும் பச்சை மிளகாய், வெங்காயத்தினை கடித்துக் கொண்டு சாப்பிட்ட காலம் போய் இன்று வயிறார சத்துள்ள உணவு சாப்பிடும் தரத்திற்கு உயர்ந்துள்ளோம். கரடுகளிலும், முள் செடிகளிலும் வெறுங்காலுடன் பள்ளிக்குச் சென்ற நாம் இன்று விதவிதமாக செருப்புகள்,ஸ_க்கள் அனுந்து அரசே இலவசமாக சைக்கிளில் பள்ளிக்கு சென்று இலவசமாக பள்ளிப் படிப்பினை முடிக்க உதவும் காலமாக இருக்கிறது. உலகில் செல்வத்தில் மிளிரும் நாடாக இந்தியா மாறி வருகிறது என்றால் மறுக்க முடியாது.

பணம் எங்கே இருக்கின்றதோ அங்கே மகழ்ச்சி தாண்டவமாடும். ஆனால் அந்த மகிழ்ச்சியே குடும்பத்தின் எதிரியாகிவிடும் என்பது கிராமத்துப் பழமொழி. தங்கள் ஆண், பெண் குழந்தைகள் சிரமம் பாராது வளர பெற்றோர் வெயில், மழையென்று யோசிக்காது உழைக்கின்றனர். பிள்ளைகள் படிப்பிற்காக கம்ப்யூட்டர், செல்போன,; மோட்டார் சைக்கிள்,ஸ்கூட்டர் என்று வாங்கிக் கொடுக்கின்றனர். சிலர் தன் செல்ல சிறு பிள்ளைகளுக்கும் செல்போன் விளையாட்டு பொம்மை போல வாங்கிக் கொடுக்கின்றனர். வீட்டிலே இன்டர்நெட் வசதியும் செய்து கொடுக்கின்றனர். அதன் விளைவு தான் வில்லங்கம் வீட்டிற்கே வந்த கதையாகிறது. எட்டு வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் கம்ப்யூட்டரில் ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக் என்ற வலை தளங்களுக்கு தங்கு தடையின்றி சென்று பல்வேறு பால் வித்தியாமில்லாத புது நண்பர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளம், ‘பாப் அப்’ தெரியும் படி செய்து இள மனதினை கெடுக்கிறார்கள். அது போன்று செல்போனில் காதல் பேச்சுகள், தனிமையில் முத்தமிடுதல், ஏன் பாலியல் தொடர்புகளைக் கூட கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். பெற்றோரும், அரசும் தரமான பள்ளி, கல்லூரி படிப்பினை மாணவர்களுக்கு கொடுக்க ஆசைப்படுகின்றது. ஆனால் மாணவர்களில் சிலர் படுகுழி என்று தெரிந்தும் அதில் விழும் செய்திகளை நாம் படிக்கின்றோம்.

அன்றாட வாழ்க்கையிலும் கேள்விப்படுகிறோம். பல்வேறு செய்திகள் இருந்தாலும் இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்லாம் என நினைக்கின்றேன். கோவை மாவட்டத்தில் ஒன்பதாவது படிக்கும் மூன்று மாணவிகள் பள்ளியிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு காணவில்லை. அவர்கள் காணாதது சம்பந்தமாக காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் அந்த மூன்று மாணவிகளும் பெங்களூரில் இருப்பதாக அறிந்து அவர்களை சென்று பார்க்கும் போது அவர்கள் மூவரில் ஒருவர் திருமணமாகி ஆறு மாத குழந்தையுடன் இருப்பதும், மற்றும் இருவர் இரண்டு இடங்களில் வீட்டு வேலை செய்வதாகவும் தெரிந்தது. தன் தோழியின் காதலுக்காக மற்ற இரண்டு மாணவிகளும் தங்கள் படிப்பினை பாழடித்து, பாலுட்டி தாளாட்டிய பெற்றோரை மறந்து வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால் எந்தளவிற்கு காதல் கண்ணை மறைத்துவிட்டது என்பதினைப் பாருங்களேன்.

2) தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சார்ந்த இரண்டு மாணவர்களில் ஒரு மாணவர் கஸ்தூரி என்ற பள்ளி மாணவியினை ஒரு தலை பட்சமாக காதலித்தாராம். அவருக்கு அவருடைய நண்பர் உதவி செய்தாராம். ஆனால் அந்த பள்ளி மாணவி அதனை வெறுத்தாராம். அவர்களின் முறையில்லா செயலினை ஊர் பெரியவர் சுவாமிநாதன் தட்டிக் கேட்டாராம.;. அந்த பள்ளி மாணவியினையும,; அந்த ஊர் பெரியவரையும் பலி வாங்க அந்த இரண்டு மாணவர்களும் இரண்டு செல்போன் சார்ஜர்கள் வாங்கி அதில் டெட்டனேட்டர்களைப் பொறுத்தி மாணவி மற்றும் ஊர் பெரியவர் வீடுகளின் முன்பாக இரவு வீசி விட்டார்களாம். காலையில் அதனை அறியாத அந்த மாணவியும,; அந்த ஊர் பெரியவரும் அவர்கள் வீட்டு முன்பு கிடந்த சார்ஜரை எடுத்து செல்போனில் கனெக்ஷன் கொடுத்து பிளக்கில் மாட்டும்போது அவைகள் வெடித்து அவர்கள் இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக சமீபத்திய பத்திரிக்கை செய்தியாகும்.

இளசுகளை கெடுப்பதில் மூல காரணமாக உள்ளது. டி.வி. அடுத்தது சினிமா. டி.வி.யில் ஜாக்பாட்டில் ஜட்ஜாக வரும் நடிகை முதுகு தெரியும் அளவிற்கு உடை அணிந்து வருவதும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக வரும் நடிகைகள் பாத்ரூம் உடையோ என்று எண்ணும் அளவிற்கு அரைகுரை ஆடை உடுத்தி வருவதும், பள்ளிப்பருவத்திலேயே காதல் செய்வது போன்ற சினிமா பார்ப்பதும், ‘கல்யாணமே கட்டிக்கில்லாமல் ஓடிப்போகலாமா’ என்பது போன்ற சினிமா பாட்டுக்களை கேட்பதும் இளசுகளின் பாலியல் உணர்வுகளை தூண்டும் நிகழ்ச்சியாக உள்ளது. என்றால் யாரும் மறுக்க முடியாது. அதுவும் வசதியுள்ள பிள்ளைகள் உண்ணும் சத்துள்ள உணவு அவர்களின் உடலில் ஒரு விதமான ரசாயண கலவை ஏற்பட்டு கிளர்ச்சியினைத் தூண்ட மூல காரணமாகவும் உள்ளது. அதுவே அவர்கள் பெற்றோர்களே இல்லாமல் தங்களுடைய வாழ்க்கையினை தேர்ந்தெடுத்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்கின்றனர்.

கிராமத்தில் ஒரு பழமொழி, ‘முல்லைச் செடிக்கு கள்ளிச் செடி’ என்று தெரிவதில்லை என்று. முல்லைச் செடி போன்ற இளம் வயதினர் அறியாத பருவத்திலே தங்கள் கள்ளிச் செடி என்ற காதல் மேல் நாட்டம் கொள்கின்றனர். அதற்கு உதவியாக செல்போனும், இன்டர்நெட்டும் இருக்கிறது.

ஆனால் அவைகளின் வாசனை இல்லாத மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்கிறார்கள் என்று சில உதாரணங்களை கூற ஆசைப்படுகிறேன்:

1) சென்ற பிளஸ் 2 பரீட்சையில் முதல் ரேங்க் மற்றும் இரண்டாம் ரேங்க் வாங்கிய தூத்துக்குடியினைச் சார்ந்த பாண்டியன், நாமக்கல்லைச் சார்ந்த சந்தியா, ராஜபாளையத்தினைச் சார்ந்த பிரக்ஷனா ஆகியோர் டி.வி பார்ப்பதில்லையாம்.

2) பேசுபவர்களின் உதடு அசைவினை வைத்து புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட திருவல்லிக்கேனியினைச் சார்நத கார் டிரைவர் மகள் பாத்திமா பிளஸ் 2 தேர்வில் காது கேளாதவர் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் டி.வி. பார்ப்பதில்லை.

3) கன்னியாகுமரி மாவட்டம் ரவிபுதூர்கடையினைச் சார்ந்த சென்னை எஸ்.எஸ்.என் இன்ஜினீரியங் கல்லூரி மாணவி மாஷா மலைக்க வைக்குமளவிற்கு சாதனை படைத்து எட்டு புதிய கண்டுபிடிப்பிற்கு மூலகர்த்தாவாகி ஜனாதிபதியிடம் சான்றிதழ் வாங்கியுள்ளார.; அவர் டி.வி. பார்ப்பதில்லையாம்.

செல்போன்கள் திருமணமாகாத சிறுவர், சிறுமிகளின் மனதினைக் கொடுக்கும் சாதனமாக இருக்கிறது என்று அறிந்து உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லாங் என்ற கிராமத்தில் ஊர் பஞ்சாயத்துக் கூடி திருமணமாகாத இளம் பெண்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்திருக்கிறது என்றால் பாருங்களேன் எந்தளவிற்கு அந்த கிராமத்தில் செல்போன்கள் வளரும் பெண்களின் வாழ்க்கையினை சீரழித்திருக்குமென்று.

செல்போன், இன்டர்நெட் துஷ் பிரயோகங்களை தடுக்க சில யோசனைகள்:

1) பள்ளி மாணவ, மாணவியருக்கு கண்டிப்பாக செல்போன் வழங்கக் கூடாது. அப்படி வழங்குவுதாக இருந்தால் அவசர அழைப்புகளுக்கு மட்டுமே அதனை உபயோகிக்கும் அளவிற்கு சேவை வாங்க வேண்டும்.

2) கல்லூரி மாணவியர், மாணவர்களுக்கு போஸ்ட் பெய்டு செல்போன் சேவை வழங்கலாம். அவைகளின் கால் சார்ஜ், எஸ்.எம்.எஸ் சார்ஜ் அட்டவணை பில்லுடன் சேர்ந்து வருமாறு செய்து பெற்றோர் அதனை கண்காணிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த அண்ணா யுனிவர்சிட்டி துணை வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் யுனிவர்சிட்டி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதித்திருந்தார். முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட பின்பு அதன் முக்கியத்துவம் அறிந்து அவருடைய உத்திரவினை பின் பற்றி பல கல்லூரிகள் தடையும் விதித்தன. ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகள் செல்போன் பேச்சுக்களை கண்காணிப்பதினை முதலில் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காக பிள்ளைகளை படுகுழுpயில் விழ அனுமதிக்கலாமா? பெற்றோர்கள் மனந்தளராது. எது தன் பிள்ளைக்கு உகந்தது என்பதினை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

3) இன்டர்நெட்டில் என்ன செய்திகளை பிள்ளைகள் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதினை படித்த பெற்றோர் கம்ப்யூட்டரினை டவுண்லோடு செய்தால் கண்டு பிடிக்கலாம். இன்னும் பெற்றோருக்கு தெரியாமல் வரும் மெயில்களை பிள்ளைகள் நீக்கினால் அப்படி நீக்கப்பட்ட பகுதி டிரேஸ் பகுதியில் இருக்கும். அதனை இயக்கி தெரிந்து கொள்ளலாம்.

4) தங்கள் மகன், மகள்களை படிப்பதிற்காக விடுதியில் விடும்போது அவர்களை தண்ணீர் தெளித்து விடாது அவர்கள் இருக்கும் விடுதிகளுக்கு சென்று அவர்களின் மேற்பார்வையாளர்களிடம் பிள்ளைகள் நடத்தையினை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

5) செல்போனில் வரும் தெரியாத மிஸ்டு கால்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லக்கூடாது. அதுவும் பெண்கள் கண்டிப்பாக பதில் சொல்லக்கூடாது.

6) ஆண் துணை இல்லாத பெண்களுக்கு எமன்போல சிலர் வந்து அவர்களிடம் பழக்கத்தினை ஏற்படுத்தி அவர்கள் உயிருக்கும், கற்புக்கும் உலை வைப்பார்கள். உதாரணத்திற்கு ஆள் துணையில்லாத இராமநாதபுரம் கேனிக்ரையினைச்சார்ந்த மலேசியாவிலிருந்து வந்த ஆதிலா பேகம் என்ற பெண் ஒருத்தி சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவதிற்காக ஒரு ஆணுடைய துணையினை நாடி அதுவே எமனாக முடிந்து அந்த நபர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அவளையும, அவளுடைய அழகான ஆண் ஒன்று பெண்னொன்று குழநதைகளைக் கடத்தி வாடிப்பட்டி அருகே கொலையும் செய்து விட்ட நவம்பர் மாதச் செய்தி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

7) திருமணத்திற்கு நிச்சயம் வைத்து பின் திருமணம் நடக்க சில நாட்கள் இருக்கும் போது ஆணும் பெண்ணும் தங்களுடைய செல்போனிலோ அல்லது இண்டர்நெட்டிலோ தனிமையினை படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுக்க அனுமதிக்கக் கூடாது. அது போன்று ஒரு நிகழ்ச்சியில் மணப்பெண் தன்னுடைய் நிர்வானமான படத்தினை நிச்சயிக்கப் பட்ட மாப்பிள்ளை தானே என்று அனுப்பிய போட்டோ பிற்காலத்தில் திருமணம் பாதியில் முறிந்து விட்டபோது அந்த போட்டோவை வைத்தே மாப்பிள்ளை வீட்டார் அந்தப் பெண்ணை கேவலமாக பேசியதும் சமீபத்திய செய்தியாக வந்தது. ஆகவே ஆணும் பெண்ணும் காதல் கத்தரிக்காய் என்று வேற்று ஆணுடன் சுற்றும் போது சேர்ந்து நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோ எடுக்க அனுமதிக்கக் கூடாது.

பெண்களுக்கு எதிரான சதி என்ற உடன்கட்டை ஏறுதல், பெண் சிசுவினைக் கொல்லுதல், வரதட்சணை கொடுமை, பெண்கள் வன்கொடுமை போன்றவைகளை ஒழிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆகவே அந்த பெண்கள் விஞ்ஞான வளர்ச்சிக்கு சாதனங்களான செல்போன், இன்டர்நெட் போன்ற வைகளால் சீரழிவதினை பெற்றோரும், உற்றாரும், உடன் பிறந்தோரும் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

சனி, 26 பிப்ரவரி, 2011

ஸ்ரீவை வட்டம், சிவகளையில் புதிய சித்தா மருத்துவ பிரிவு கட்டிடம்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!


ஸ்ரீவைகுண்டம் வட்டம், சிவகளை கிராமத்தில் இன்று (25.2.2011) ரூ.9.56 லட்சம் மதிப்பிலான புதிய சித்தா மருத்துவ பிரிவு கட்டடத்தை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன், தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், தமிழக முதல்வர் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து மக்கள் நோயற்ற வாழ்வு வாழ எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி நிறைவேற்றி வருகிறார். இயற்கை சார்ந்த மருத்துவ வசதிகள் தங்கள் கிராமத்திலே கிடைப்பதால் கிராம மக்கள் இத்தகைய அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அரோக்கியமான வாழ்வு வாழ கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

முன்னதாக அமைச்சர் கீதாஜீவன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.3000 வீதம், ரூ.60 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எம்.பி.சுடலையாண்டி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் செல்வி அருள், மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி, ஒன்றியக் கவுன்சிலர் எஸ்.ஆறுமுகப் பெருமாள், சிவகளை ஊராட்சி மன்றத் தலைவர் நாரயண பிள்ளை, துணை இயக்குநர் எஸ்.உமா, ரவீந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பால.சக்திதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சமூக நலத்துறை அமைச்சர் சாயர்புரம் - சுப்பிரமணியபுரத்தில் பகுதி நேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இணைப்பதிவாளர் (கூட்டுறவு) முருகன், நட்டாத்தி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார், பேரூராட்சி உறுப்பினர்கள் தங்கரதி, காசி, மரியசுந்தரம் உட்பட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தகவல் : தூத்துக்குடி வெப்சைட்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கூகிள் நடத்தும் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி எல்லா நாட்டு மக்களும் பங்குபெறலாம்


உங்கள் குழந்தை புதிதாக எதையாவது செய்து உங்களை
ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கார்களா, அப்படி உங்கள் குழந்தை
உங்களை ஆச்சர்யப்படுத்தினால் உங்கள் குழந்தைகளுக்கான
களத்தை உலக அளவில் நம் கூகிள் வழங்குகிறது ஆம் கூகிள்
தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய போட்டிதான்
Google Science Fair  திருவிழா இந்தப்போட்டியைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று மல்லுக்கட்டி கொண்டு
திறமையான பல நபர்களை உலகின் பல நிறுவனங்கள் பயன்படுத்தாமல்
இருக்கும் செய்தி கூகிள் காதுக்கு சென்றுவிட்டது போலும், ஆம்
உங்கள் குழந்தைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த அல்லது
உங்களிடம் படிக்கும் மாணவர்களிடம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கும்
ஆர்வம் திறமை இருந்தால் கூகிள்  நடத்தும் அறிவியல் திருவிழாவில்
பங்கேற்க செய்யுங்கள் , இங்கு ”திறமைக்கு மட்டும் தான் முதலிடம்  “
என்ற நோக்கில் உலகின் எந்த நாட்டில் இருப்பவரும் இந்தப்போட்டியில்
பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள்
தங்கள் பிராஜெக்ட் பற்றிய தகவல்களை ஏப்ரல் 4, 2011 -க்குள் அனுப்பி
வைக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசாக $25,000
மேல்படிப்பு செலவுக்காக குகிள் வழங்குகிறது. உங்கள் ஐடியாவுக்கு
உயிர் கொடுக்க வேண்டிய வேலையை கூகிள் பார்த்துகொள்ளும்,
தமிழ் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெற வின்மணி
மனதார வாழ்த்துகிறது. அனைத்து மக்களிடமும் இந்ததகவலை
எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம்.
போட்டியில் பங்கு பெற விரும்பும் நபர்கள் இங்கு கொடுத்திருக்கும்
கூகுளின் தளத்தை சொடுக்கி மேலும் பல தகவல்களை விரிவாக
தெரிந்துகொள்ள்லாம்..
இணையதள முகவரி : http://www.google.com/events/sciencefair/index.
தகவல் உதவி : விண்மணி 

2011-12 ரயில்வே பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்


2011-12 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் மமதா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார்.


பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:


பயணிகள், சரக்குக் கட்டணம் உயர்வில்லை


56 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், 3 சதாப்தி ரயில்கள், 9 துரந்தோ ரயில்கள் அறிமுகம்.


இ-டிக்கெட் வசதிக்காக புதிய இணையதளம்


புதிய ரயில்கள்:


துரந்தோ ரயில்கள்: அலகாபாத்-மும்பை, புனே-ஆமதாபாத், சீல்டா-புரி, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், மதுரை-சென்னை, சென்னை திருவனந்தபுரம், மும்பை-தில்லி, தில்லி-அஜ்மீர்


புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்: ரேபரேலி-ஜான்பூர் எக்ஸ்பிரஸ், சாசரம்-தில்லி எக்ஸ்பிரஸ், நாக்பூர்-கோல்கோபூர் எக்ஸ்பிரஸ், புனே-நான்டெட் எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம்-கோல்காபூர் எக்ஸ்பிரஸ்,ஹெளரா-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், மும்பை-சண்டிகர் எக்ஸ்பிரஸ், பர்த்மன்-ராம்புர்ஹத் எக்ஸ்பிரஸ், ஹைதராபாத்-பார்பலா எக்ஸ்பிரஸ், ஹெளரா-திருப்பதி எக்ஸ்பிரஸ், புரி-ஷாலிமர் எக்ஸ்பிரஸ், ராஞ்சி-புனே எக்ஸ்பிரஸ், ஹெளரா-மைசூர் எக்ஸ்பிரஸ், திகா-விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ்



டபுள் டெக்கர் ஏசி ரயில்கள்: ஜெய்ப்பூர்-தில்லி, ஆமதாபாத்-மும்பை


மும்பை-ஹெளரா- 4 நாள், சீல்டா-தில்லி- 5 நாட்கள் நாக்பூர்-மும்பை-5 நாட்கள்


சென்னை புறநகர் ரயிலில் 9 கூடுதல் சேவைகள்

மும்பை புறநகர் பகுதியில் 47 கூடுதல் சேவைகள்


*9 புதிய துரந்தோ ரயில்கள்


*2012-ல் 56 புதிய ரயில்கள் அறிமுகம்


*பல துரந்தோ ரயில்களின் சேவை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு


*மகளிருக்கு மூத்த குடிமக்களுக்கான சலுகை வயது 58 ஆகக் குறைப்பு


*ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான இ-டிக்கெட் முன்பதிவுக் கட்டணம் குறைப்பு

*கொல்கத்தா மெட்ரோவில் 34 புதிய ரயில்சேவைகள்

*மும்பை, சென்னை, ஹைதராபாத், ஆமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த புறநகர் ரயில் நெட்வொர்க் மேம்படுத்தப்படும்

*ரயில்வே ஊழியர்களுக்கு பாதுகாப்புத் திட்டம்

*ரயில் நிலையங்களில் தள்ளுவண்டிகள்(டிராலி) அறிமுகம்

*2012-ல் 3 புதிய சதாப்தி ரயில்கள்

*ரயில் மறியல் போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும்

*ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதிகள்

*குழந்தைகளின் கல்விக்கு ரூ 1200 ஸ்காலர்ஷிப்

*காலியாக உள்ள அனைத்து இடங்களையும் நிரப்ப நடவடிக்கை

*கொல்கத்தா, தார்வார்ட், புனேவில் புதிய பயிற்சி மையங்கள்

*ஆக்ராவில் புதிய சர்வதேச பயிற்சி மையம்

*பிலால் மற்றும் தார்வார்ட் உள்ளிட்ட 5 இடங்களில் புதிய பாலிடெக்னிக்

*கேரளா பாலக்காட்டில் ரயில்பெட்டி தொழிற்சாலை

*12-வது திட்டத்தின்கீழ் அனைத்து ரயில் திட்டங்களும் பிரதமரின் ரயில்விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் சேர்ப்பு


*474 கிலோமீட்டர் ரயில்பாதையை இரட்டிப்பாக்க முடிவு


*மேலும் சில மண்டலங்களில் ரயில் மோதலைத் தடுக்கும் கருவிகள்


*ரயில்கள் பிரச்னையின்றி இயங்க 2 புதிய ரயில்வே திட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு 2 புதிய ரயில்கள்


*கடந்த ஆண்டு 1500 ரயில்கள் ரத்து; 3500 ரயில்களின் நேரம் மாற்றி அமைப்பு


*ரயில் பாதை சீரமைப்பால் ரூ 300 கோடி சேமிப்பு


*ஊனமுற்றவர்களுக்காக ரயில்நிலையங்களில் சிறப்பு வசதிகள்


*ரயில் பாதுகாப்புக்கு முன்னுரிமை, விபத்து சதவீதம் குறைவு


*புதிய ரயில் பாதைக்காக ரூ 9583 கோடி செலவிட முடிவு


*ரயில் பாதைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்காக 10 ஆயிரம் வசிப்பிடங்கள் கட்ட முடிவு


*ரயில்வே பணிகளில் 16 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரை சேர்க்க முடிவு


*2011-ம் ஆண்டு பசுமை ஆண்டாக அறிவிப்பு


*இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடைவிதித்ததன் மூலம் ரூ 2000 கோடி இழப்பு


*மேம்படுத்தப்பட்ட ஏசி சேவை விரைவில் அறிமுகம்


*அகில இந்திய பாதுகாப்பு ஹெல்ப்லைன் அமைப்பு


*442 ரயில்நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் மார்ச் 31-க்குள் நிறைவடையும்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

மின்கட்டணம் வசூல் செய்ய புதிய திட்ட: 1ம் தேதி முதல் அமல்!


தூத்துக்குடி மாவட்டத்தில் மின் கட்டணம் வசூல் செய்ய புதிய திட்டம் வருகிற 1ம் தேதி(செவ்வாய்க்கிழமை) முதல் அமலாகிறது.

இது குறித்து தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் ஆர்.அமிர்த ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி கடந்த 01-12-2010 முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மின்கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மின்கட்டணம் செலுத்தும் முறையில் புதிய திட்டம் அமல் படுத்தப்படுகிறது. 30 நாட்கள் மின்கட்டணம் கணக்கெடுக்கவும், 30 நாட்கள் வசூல் என்ற புதிய முறை வருகிற 1ம் தேதி(செவ்வாய்க் கிழமை) முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் ஆர்.அமிர்த ரத்தினகுமார் தெரிவித்து உள்ளார்.

தகவல் : தூத்துக்குடி வெப் சைட்

புதன், 23 பிப்ரவரி, 2011

முதல்முறையாக 150 ரூபாய் நாணயம் வெளியாகிறது


இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல்முறையாக, 150 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.

வருமான வரித்துறை தொடங்கப்பட்டு, 150 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில், இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது.

வருகிற 28-ந் தேதி, பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த நாணயத்தை வெளியிடுகிறார்.

இந்த நாணயம், வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம், 'சத்யமேவ ஜெயதே', 'இந்தியா' ஆகிய வார்த்தைகளுடன் சர்வதேச வடிவமைப்பு கொண்டதாக இருக்கும். பின்பக்கத்தில், சாணக்கியர் படமும், தேனீயுடன் தாமரை மலர் படமும் இடம்பெற்று இருக்கும். 150 ரூபாய் மதிப்புள்ள 200 நாணயங்கள் அச்சிட்டு வெளியிடப்படும்.

மேலும், வருமான வரித்துறையின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் நிறைவடையும்போது, 5 ரூபாய் மதிப்புள்ள 100 சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படும். நாணயங்களும், 150 ரூபாய் நாணய வடிவமைப்பிலேயே, ஆனால் சற்று சிறியதாக இருக்கும்.

தகவல் : தட்ஸ்தமிழ்

LinkWithin

Blog Widget by LinkWithin